அவரோடு இணைந்திருப்பதில் உறுதிபெறுவோம்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

9 செப்டம்பர் 2025                                                                                                                  
பொதுக்காலம் 23ஆம் வாரம் – செவ்வாய்
 
கொலோசையர் 2: 6-15
லூக்கா 6: 12-19


அவரோடு இணைந்திருப்பதில் உறுதிபெறுவோம்!


முதல் வாசகம்.


முதல் வாசகத்தில், கடவுள் தங்கள் மீது கொண்ட அன்புக்கும் கேட்டறிந்த  நற்செய்திக்குப் உண்மையாக இருக்குமாறு கொலோசையரை  புனித பவுல் வலியுறுத்துகிறார்.


கொலோசையக் கிறிஸ்தவ சமூகத்தை விட்டுப்  பிரிந்ததிலிருநந்து, அவர்களின் வாழக்கைநிலை குறித்து  பவுல் கவலைப்படுகிறார்.

புறவினத்தாராகிய கொலோசிய கிறிஸ்தவர்களை விருத்தசேதனம் செய்து யூத மரபுகளைப் பின்பற்றும்படி கட்டாயப்படுத்திய சில "போதகர்களும்" அவர்களிடையே போதித்து வந்தனர.  அவர்கள் இயேசுவின் இறை தன்மையையும்  குறைத்து மதிப்பிட்டனர்.  எனவே, கொலோசையரை நோக்கி, அவர்கள்  மனிதக் கையால் விருத்தசேதனம் செய்யப்பட்ட யூதர்களைப்போல்  அல்ல; திருமுழுக்கினால் இயேசுவோடு இணைந்திருக்கிறார்கள் எனபதை வலியுறுத்தி எழுதுகிறார். 

திருமுழுக்கில் அவர்கள் தங்கள் பழைய, பாவமான வழிகளில் இறந்து, உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசுவுடன் எழுப்பப்பட்டனர். இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும் அவர்களின் புதிய வாழ்க்கையின் மூலமும் ஊற்றுமாக உள்ளதை நினைவூட்டுகிறார்.


நற்செய்தி.


நற்செய்தியில், இயேசு இரவை தந்தையோடான இறைவேண்டலில் கழித்தப்பின்    இரண்டு முக்கிய நிகழ்வுகள் நிகழ்கின்றன. முதலாவதாக, இயேசு பன்னிரண்டு சீடர்களை அழைத்து அவர்களை திருத்தூதர்களாக நியமிக்கிறார். 


இரண்டாவதாக,   இயேசு  தம் குணப்படுத்தும் பணியைத்தொடர்கிறார். குணபப்டுத்தும் பணியின் மூலம், அவர் கடவுளின் இரக்கத்தை மக்களுக்கு வெளிப்படுத்துகிறார்.


சிந்தனைக்கு.


இந்த வாரம் முழுவதும் நாம் வாசிக்கும் இந்த "சமவெளிப் மறையுரை " அறிமுகத்தில், இயேசுவின் நற்செய்தியைக் கேட்க  ஏராளமான மக்கள் தொலைதூரத்திலிருந்து வந்ததாக லூக்கா சுட்டிக்காட்டுகிறார். இந்தக் கூட்டத்தில் பல யூதர்களும்  தீர், சீதோன் ஆகிய புறவினத்தார் ஊர்களில் இருந்தம்  பலர் இருந்தனர் என அறிகிறோம்.

இயேசுவின் மறையுரையைக் கேட்கவும், குணப்படுத்தப்படவும் அவர்கள் வந்தார்கள். இயேசு மிகுந்த அதிகாரத்துடனும் வாழ்க்கையை மாற்றும் விதத்திலும் பேசியதால், அவர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்க விரும்பினர். இயேசு வெளிப்படுத்திய குணப்படுத்தும் வல்லமையால் அவர்கள் மிகவும் கவரப்பட்டனர்.   

நிறைவாக, அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.

அதே வேளையில், இயேசு தம் பக்க்ம் இருந்த பல  சீடர்களிர் பன்னிரு பேரை திருத்தூதர்களாக நியமிக்கிறார். இயேசுவின் நற்செய்தி பணி அவரது மூன்றாண்டு பணிக்காலத்தோடு முடிவடைவதல்ல. அது தொடர வேண்டும். இப்பணியைத்தொடர பன்னிருவரை தேர்வுச் செய்து, பயிற்றுவித்து அனுப்பவுள்ளார்.  இறைவேண்டல் வாயிலாக, தன் தந்தையோடு ஒன்றித்திருந்த பின் இயேசு, தன்னோடு இணைப்பில் இருப்பதற்காக பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றார்.

இயேசு செய்தது போல் நாமும் இறைவேண்டலில் நேரத்தை செலவிட வேண்டும். நாம் ஒவ்வொருவரும் திருத்தூதராக இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் - இயேசுவின் நற்செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பணியைத் தொடர நாமும் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும்  நாம் உணர்ந்துள்ளோமா? என்பதே கேள்வி.  இயேசு, பன்னிரு திருத்தூதர்களை நியமிக்கும் முன், தந்தையயோடு உரையாடுகிறார். கடவுளின் திருவுளப்படி காரியங்கள் நிறைவேற இறைவேண்டல் இன்றியமையாத ஒரு கூறு என்றும்  இன்று அறிவுறுத்தப்படுகிறோம். 


முதல் வாசகத்தில்  இதையே பவுல் அடிகளும் வலியுறுத்துகிறார். அவர் கொலோசையரை   'அவரோடு இணைந்து வாழுங்கள்' என்று  அழைக்கின்றார். ஆகவே, நாம் ஒவ்வொரு நாளும் அவரோடு தொடர்பில் இருப்பது மட்டுமல்ல, இணைப்பில் இருப்பதும் அவசியம் என்பதை மனதில் கொள்வோம்.

இறைவேண்டல்.


ஆண்டவராகிய இயேசுவே, உம்முடைய வார்த்தையை நான் கேட்கும்படியும்  உம்மைத் தேடவும், உம்மோடு இணைப்பில் இருக்கவும்   எனக்கு உதவியருளும்.  ஆமென்.

 

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452