Notre Dame பேராலயத்தை காணவரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு! | Veritas News

பாரிசில் உள்ள Notre Dame பேராலயத்தில் தீ விபத்து ஏற்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்த பிறகு, கடந்த ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதியன்று, திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக இப்பேராலயம் திறக்கப்பட்டதிலிருந்து,  இந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை ஏறக்குறைய 60,15,000 பேர் இதனைப் பார்வையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் Notre Dame பேராலயத்தை ஒவ்வொருநாளும் ஏறத்தாழ 35,000 பேர் பார்வையிடுவதாக பிரான்சின் La Tribune Dimanche  என்னும் நாளிதழ், ஜூலை 6, ஞாயிறன்று  செய்தி ஒன்றை வெளியிட்டது.

இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் மற்றும் திருப்பயணிகளின் வருகை தொடர்ந்து இடம்பெறுமானால், 2025-ஆம் ஆண்டின் முடிவில் பார்வையாளர்களின்  எண்ணிக்கை 1 கோடியே 20 இலட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், தற்போது பிரான்சில் அதிகம் பார்வையிடப்படும் இடமான ஈஃபிள்  கோபுரத்தைவிட, Notre Dame பேராலயம் பார்வையாளர்களின் எண்ணைக்கையில்  முன்னிலையில்  வரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Notre Dame   பேராலயத்தின் தூண்கள், திருப்பொருள் அறை என மறுசீரமைப்புப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வரும் ஆண்டில் புதிய வண்ணக்கண்ணாடி ஜன்னல்கள்  பொருத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேராலய முன் பகுதி, பசுமைத் தளங்கள் மற்றும் நடைபாதைகள் உள்ளிட்டவை 2027-ஆம் ஆண்டில் புனரமைக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.